அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி தடை நீக்கத்துக்காக விதித்த 48 மணிநேரக் காலக்கெடு குறித்த தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார் எனத் தெரிய வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க ஈரானுக்கு விதித்திருந்த காலக்கெடுவை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீட்டித்துள்ளார். நாளை செவ்வாய் கிழமைக்குள் ஜலசந்தி திறக்கப்படா விட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா அதனை மேலும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று இன்று திங்களன்று அவர் கூறினார்.
அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் விடுத்துள்ள அறிவிப்பில், இதனைத் தெரிவித்துள்ள அவர்,போருக்கு ஒரு தீர்வு காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார். அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்து, பிராந்தியம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்குப் பேரழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்திய நிலையில், டிரம்பின் இந்த நிலைமாற்றம் ஒருவித தற்காலிக நிவாரணத்தை அளிப்பதாகத் தெரிய வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் "ஒரு ஒப்பந்தம் செய்ய" விரும்புவதாகவும், அமெரிக்கத் தூதர்கள் ஒரு "மதிக்கப்படும்" ஈரானியத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். தனது மத்திய கிழக்கு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் கூறினார். ஆயினும் அவர்
தெஹ்ரானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அதிகாரியின் பெயரையும் குறிப்பிடவில்லை.
டிரம்பின் சமூக ஊடக அறிவிப்புக்குப் பிறகு "ஈரானின் உறுதியான எச்சரிக்கையைத் தொடர்ந்து" அமெரிக்கத் தலைவர் பின்வாங்கிவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி அறிவித்தது. மேலும், பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் ஈரானிய அதிகாரிகள் மறுத்தனர்.
நாலு நாட்களில் முடிந்துவிடும் என அமெரிக்கத் தரப்பில் எதிர்வு கூறப்பட்ட போர், தற்போது நான்காவது வாரத்தில் இருப்பதுடன், இந்த மோதல் 2,000 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது, எண்ணெய் விலைகளை உயரச் செய்துள்ளது, மேலும் உலகின் மிகவும் பரபரப்பான சில விமானப் போக்குவரத்து வழித்தடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 நாட்கள் தூக்குதல்கள் நடத்தப்படமாட்டாது என அமெரிக்க அதிபர் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 7 சதவீதம் சரிந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
