தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், குறுவை சாகுபடியால் விவசாயிகள் பாதிப்பு, முதல்வரின் பெங்களூர் பயணம் உள்ளிட்டவை குறித்தும் விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் விஜய் பேசியதாவது:
”காவிரி நமக்கு உயிர் ஆதாரம். உணர்வு ரீதியான ஒன்று. அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணமும், அவசியமும் இல்லை. மேக்கேதாட்டு விவகாரத்தில் அனைவரும் இணைந்து இயற்றிய தீர்மானத்தை பிரதமருக்கு கடிதமாக அனுப்பி வைத்துள்ளோம். மாநிலங்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் முழு விவரத்தை குறிப்பிடாத நிலையில், முழு விவரத்தை குறிப்பிட்டு மறுநாளே பிரதமருக்கு கடிதம் எழுப்பினோம்.
காவிரி நதி நீர் பங்கீட்டிலும், மேக்கேதாட்டு அணை கட்டுவதிலும் தமிழ்நாட்டின் உரிமையை நம் அரசு விட்டுக் கொடுக்காதது. கர்நாடகத்தில் சில அணைகள் கட்ட தொடங்கியது பற்றி இதே அவையில் 1969-ல் விவாதம் நடைபெற்றது. அப்போது நீர்வளத் துறை அமைச்சர் யார்? அணை கட்டவிட்டது யார்? என்ற அரசியல் செய்யப் போவதில்லை.
காவிரி விவகாரத்தை கவனமாக கையாள வேண்டும். யார் ஆள்வது, யாருக்கு பெருமை என்றெல்லாம் பார்க்கக் கூடாது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்னை.
கர்நாடகத்துக்கு சென்று பேசிப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன். பெங்களூரு செல்ல நினைத்தது பற்றி பல கருத்துகள் வந்தது. நேர்மறையாக எதாவது நடந்தால் நல்லது என நினைத்தேன். இன்றைய காலத்தில் பகை நாடுகளே பேச்சுவார்த்தை நடத்தும் போது, பக்கத்து மாநிலத்துடன் பேசினால் என்ன? என்று நினைத்தேன். அந்த முயற்சியில் அவமானம் நடந்தால் என்ன செய்வது எனக் கேட்டார்கள்? தமிழ்நாடு மக்களுக்கு அதற்கும் தயாராக இருந்தேன்.
குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்குவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார். அதனை ஏற்கெனவே வழங்கிவிட்டோம். அரசியலே நாங்கதான் என சொல்பவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது. பேப்பர் படித்திருந்தால் நாட்டு நிலவரம் தெரிந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பு தொகுப்புதான் அரசு வழங்கியது. அது அனைத்து அரசும் வழங்குவதுதான். விவசாயிகள் கேட்பது வறட்சி நிவாரணம். நாள்தோறும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. அனைத்துக் கட்சிகள், விவசாயிகளுடன் பேசி கருத்தை கேட்க வேண்டும் என்றார்.
