மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் புனித பாப்பரசர் போப் லியோ XIV வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் ஒரு பதிவில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் நிறுத்தத்திற்கு ஒரு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோளை விடுத்தார். அனைத்து தரப்பினரும் விரோதங்களை நிறுத்திவிட்டு அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்
“மத்திய கிழக்கின் கிறிஸ்தவர்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட அனைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சார்பாக, இந்த மோதலுக்குப் பொறுப்பானவர்களிடம் நான், போர் நிறுத்த வேண்டுகோள் விடுக்கிறேன். பேச்சுவார்த்தைக்கான பாதைகள் மீண்டும் திறக்கப்படட்டும். மக்கள் காத்திருக்கும் நீதி, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு, வன்முறை ஒருபோதும் வழிவகுக்காது," என்று அவர் தனுது குறிப்பில் எழுதினார்.
இதேவேளை போப்பின் அழைப்புக்கு செவிசாய்க்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இதுவரை போர் நிறுத்த அழைப்புகளை நிராகரித்துள்ளனர்.
கடந்த வாரம், லெபனானில் இஸ்ரேலிய டாங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட லெபனான் பாதிரியார் பியர் எல்-ரஹியின் மரணத்திற்கு போப் லியோ இரங்கல் தெரிவித்திருந்தார்.
