ஒரு இணையத்தளம் பிறந்தது. ஒரு ஊடகப் பயணம் தொடங்கியது. ஒரு தலைமுறை மாறியது. உலகம் டிஜிட்டலாகியது. அந்த மாற்றங்களின் நடுவே, தமிழில் தனது சுயாதீனமான குரலைத் தொடர்ந்து பேணிக்கொண்டிருக்கும் 4தமிழ்மீடியா, பதினெட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2008-இல் தொடங்கிய இந்தப் பயணம், ஒரு இணைய முகவரியின் வரலாறு மட்டுமல்ல. இது ஒரு காலத்தின் அரசியல் நினைவகம். இது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் பதிவேடு. இது செய்திகளின் வழியே மாறிவந்த உலகைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு தொடர் முயற்சி. இது கலை, அரசியல், பொருளாதாரம், ஆன்மீகம், சமூகம், தொழில்நுட்பம் என வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தமிழில் உரையாடலுக்குக் கொண்டுவந்த ஒரு ஊடகப் பயணம். முக்கியமாக இது வாசகர்களின் நம்பிக்கையால் கட்டப்பட்ட பயணம்.
இன்று ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்களை எட்டியிருக்கும் இந்தப் பயணத்தை, எண்ணிக்கையின் வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது. ஒவ்வொரு வாசகரும் ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு வாசிப்பும் ஒரு பொறுப்பு.
ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பொறுப்பு மேலும் பெரிதாகியுள்ளது.
2008 — முதல் அடிச்சுவடு
ஒரு புதிய நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள். தமிழ் இணையம் வளர்ந்து கொண்டிருந்த காலம். தகவல் தொழில்நுட்பம் உலகத்தைச் சுருக்கத் தொடங்கியிருந்தாலும், தமிழில் தரமான செய்தி, சிந்தனை, கலை, அரசியல், சமூகப் பார்வைகளை ஒரே இணைய வெளியில் தொடர்ந்து வழங்கும் முயற்சிகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருந்தன.
அந்தச் சூழலில் 4தமிழ்மீடியா தனது பயணத்தைத் தொடங்கியது. அது ஒரு பெரிய ஊடக நிறுவனமாகப் பிறக்கவில்லை.ஆனால் ஒரு தெளிவான நோக்கத்தோடு பிறந்தது.
சுதந்திரமாக எழுத வேண்டும்.
நடுநிலையுடன் பார்க்க வேண்டும்.
பல தளங்களில் சிந்திக்க வேண்டும்.
தமிழில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்.
அந்த முதல் அடிச்சுவடுதான் இன்று பதினெட்டு ஆண்டுகளாக நீள்கிறது.
2009 — முள்ளிவாய்க்கால்: செய்தி வரலாறாக மாறிய தருணம்
சில காலகட்டங்களில் ஊடகம் செய்தியை மட்டும் பதிவு செய்வதில்லை. அது வரலாற்றின் சாட்சியமாக மாறுகிறது. 2009 அதுபோன்ற ஒரு காலம்.
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்புப் போர் தனது கொடூரமான இறுதிக்கட்டத்தை எட்டியபோது, தகவல்களின் ஓட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உலகின் கண்களுக்கு உண்மைகள் முழுமையாகத் தெரியாத சூழலில், களத்தில் நிகழ்ந்தவற்றைச் சாட்சியங்களாகப் பதிவு செய்வது மிகப்பெரும் ஊடகப் பொறுப்பாக இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் 4தமிழ்மீடியா மேற்கொண்ட பதிவுகள், அன்றைய நிகழ்வுகளை அன்றைய செய்திகளாக மட்டும் பார்க்கவில்லை. நாளைய தலைமுறைகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கான சாட்சியங்களாக அவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற உணர்வோடு அவற்றை அணுகியது.
மனிதர்களின் கதைகள் களச் செய்திகள, பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவங்கள், அந்தக் காலத்தின் அரசியல் சூழல், உலகத்தின் எதிர்வினைகள், இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தபோது, 4தமிழ்மீடியாவின் பக்கங்கள் ஒரு செய்தி வெளியீட்டுத் தளத்தைத் தாண்டி ஒரு காலத்தின் ஆவணப் பதிவாக மாறின.
முள்ளிவாய்க்கால் எமக்கு கற்றுக்கொடுத்த மிகப்பெரிய ஊடகப் பாடம் இதுதான்; சில செய்திகளை மறந்துவிடலாம்; ஆனால் சில உண்மைகளை மறந்துவிட அனுமதிக்கக் கூடாது. ஊடகத்தின் நினைவகம் இங்கே தொடங்குகிறது.
2010–2014 — போர் முடிந்த பின் கேள்விகள் முடியவில்லை
போர் முடிவடைந்ததாக அரசியல் அறிவிப்புகள் வந்துவிடலாம். ஆனால் மக்களின் கேள்விகள் அத்துடன் முடிவதில்லை. நினைவுகள் மறைந்துவிடுவதில்லை. இழப்புகளின் கணக்குகள் தானாக மூடப்படுவதில்லை.
புலம்பெயர்ந்தோரின் மனங்களில் இருக்கும் கேள்விகளும் தாயகத்தின் மண்ணில் இருக்கும் கேள்விகளும் வெவ்வேறானவை அல்ல.
இந்த ஆண்டுகளில் 4தமிழ்மீடியாவின் கவனம் நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலிருந்து, நிகழ்வுகளின் பின்னால் இருக்கும் சமூக, அரசியல், மனிதப் பரிமாணங்களை ஆராய்வதற்கும் விரிந்தது. இது ஒரு செய்தி நிறுவனத்தின் இயல்பான பரிணாமம். நிகழ்விலிருந்து பின்னணிக்கு.பின்னணியிலிருந்து பகுப்பாய்வுக்கு.பகுப்பாய்விலிருந்து சிந்தனைக்கு என விரிந்தது அந்தப் பரிணாமம்.
2015–2019 — உலகத் தமிழரின் ஊடகப் பாலம்
இந்நாட்களில் இணைய உலகம் வேகமாக மாறியது.சமூக ஊடகங்கள் செய்தி விநியோகத்தை மாற்றின.வாசகர் இணையத்தளத்துக்கு வந்து செய்தியைத் தேடும் காலம் மெல்ல மாறி, செய்தி வாசகரைத் தேடிச் செல்லும் காலம் உருவானது. தமிழ்ச் சமூகமும் இதிலிருந்து விலகவில்லை.
தாயகம், ஐரோப்பா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என, உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் ஒரே தகவல் வெளியில் இணைக்கப்பட்டனர்.இந்தப் புலம்பெயர் உலகின் வாழ்வியல், அரசியல், பொருளாதார மற்றும் சமூக அனுபவங்களுக்கும் 4தமிழ்மீடியா தொடர்ந்து இடமளித்தது. இதனால் ஒரு செய்தியின் புவியியல் எல்லை விரிந்தது.தமிழ் வாசகர் இருக்கும் இடமெல்லாம் எமது ஊடகப் பரப்பின் ஒரு பகுதியாகியது.
2020 — உலகம் நின்றபோது ஊடகம் நின்றுவிடவில்லை
வந்தது COVID-19. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் அறியப்படாத அச்சத்தை எதிர்கொண்ட காலம். எல்லைகள் மூடப்பட்டன.விமானங்கள் நிறுத்தப்பட்டன. பொது வாழ்க்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஊரடங்குகள், சுகாதார விதிமுறைகள், பயணத் தடைகள், தனிமைப்படுத்தல், தடுப்பூசி தொடர்பான மாற்றங்கள், நாடு தோறும் மாறுபட்ட கட்டுப்பாடுகள்.ஐரோப்பாவில் வாழ்ந்த தமிழர்களுக்கு இவை வெறும் உலகச் செய்திகள் அல்ல.அன்றாட வாழ்க்கையை நேரடியாக நிர்ணயித்த தகவல்கள்.
இந்தக் காலகட்டத்தில் 4தமிழ்மீடியாவின் பணி ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது.
ஐரோப்பிய நாடுகளின் நிலைமைகள், அரசாங்கங்களின் புதிய அறிவிப்புகள், பயணக் கட்டுப்பாடுகள், பொது சுகாதார விதிமுறைகள், மக்கள் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்கள், நாடு தோறும் மாறிய கட்டுப்பாடுகள்,
இவற்றை உடனுக்குடன், தெளிவாக, தமிழில் வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்த நாட்களில் ஒரு செய்தியின் மதிப்பு அதன் அரசியல் முக்கியத்துவத்தில் மட்டும் இருக்கவில்லை. ஒரு குடும்பம் நாளை பயணம் செய்ய முடியுமா? ஒருவர் தனது நாட்டுக்குச் செல்ல முடியுமா? ஒரு கடை திறக்கப்படுமா? ஒரு குழந்தை பாடசாலைக்குச் செல்லுமா? என்ற கேள்விகளுக்கான பதிலாகவும் செய்தி மாறியது.
COVID காலம் எமக்கு இன்னொரு ஊடகப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது.துல்லியமான தகவல் சில நேரங்களில் ஒரு சேவை. தெளிவான தகவல் சில நேரங்களில் ஒரு பாதுகாப்பு.

2021–2022 — தகவல் பெருக்கத்தில் நம்பகத்தன்மையைத் தேடுதல்
பெருந்தொற்றுக் காலம் முடிவை நோக்கிச் சென்றபோது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆனால் ஊடக உலகம் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. மாறாக, இன்னும் வேகமான தகவல் உலகம் உருவானது.
ஒரு நிகழ்வு நிகழும் முன்பே அதன் முன்னோட்டம் சமூக ஊடகங்களில், நிகழும் நேரத்தில் நேரலை. நிகழ்ந்த சில நொடிகளில் ஆயிரக்கணக்கான பகிர்வுகள். அதன்பின் கருத்துகள், அதன்பின் எதிர்க்கருத்துகள், அதன்பின் தவறான தகவல்கள் என இந்தச் சுழற்சியில் ஊடகத்தின் மிகப்பெரிய மதிப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது:
எது உண்மை? அதற்குப் பதில் தேடும் பொறுப்பு. வேகமான உலகில் நிதானமான ஊடகம் தேவை.தகவல் பெருக்கத்தில் சரிபார்க்கப்பட்ட தகவல் தேவை.கருத்துகளின் சத்தத்தில் உண்மையின் குரல் தேவை.
2023 — “உலா”: இணையத்திலிருந்து தொடர்பாடலுக்கான புதிய நடை
2023 முதல் “உலா” செயலியுடனான 4தமிழ்மீடியாவின் தொடர்பாடல், எமது டிஜிட்டல் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இணையத்தளம் என்பது ஒரே திசையில் தகவலை வழங்கும் இடமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை.
வாசகரை அணுகும் வழிகளும் மாறுகின்றன. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக “உலா” வழியான தொடர்பாடல் புதிய வாய்ப்புகளைத் திறந்தது. செய்தி வாசகரை அடைய வேண்டும். வாசகரின் எதிர்வினையும் ஊடகத்தை அடைய வேண்டும். இதுவே டிஜிட்டல் ஊடகத்தின் புதிய உறவு.
ஒரு காலத்தில் ஆசிரியர் எழுதினார்; வாசகர் வாசித்தார். இன்று வாசகர் கேட்கிறார், பதிலளிக்கிறார், பகிர்கிறார், விவாதிக்கிறார். அந்த இருவழித் தொடர்பாடல் ஊடகத்தின் எதிர்கால வடிவங்களில் ஒன்று.
2024 — ஒரு மொழியின் எல்லையைத் தாண்டிய பயணம்
தமிழில் தொடங்கிய ஊடகம் உலகை நோக்கிப் பார்க்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. எமது சிந்தனைகள் தமிழுக்குள் மட்டும் இருக்க வேண்டுமா? தமிழின் அனுபவங்கள் தமிழில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அவை உலகத்துடனும் உரையாட வேண்டும்.
தமிழ் சமூகத்தின் அரசியல், பண்பாடு, கலை, வரலாறு, புலம்பெயர் வாழ்க்கை, பொருளாதார அனுபவங்கள் ஆகியவை பிற மொழி வாசகர்களுக்கும் சென்றடைய வேண்டிய தேவை அதிகரித்தது. அதற்கான தொழில்நுட்ப அடித்தளங்கள் உருவாகத் தொடங்கின. அடுத்த மைல்கல்லுக்கான கதவு திறந்தது.
2025 — 12 மொழிகளுக்குள் விரியும் தமிழ் குரல்
2025 முதல் 4தமிழ்மீடியாவின் உள்ளடக்கங்களை 12 மொழிகளில் மொழிமாற்றம் செய்து வாசிக்கும் வசதி உருவானது. இது ஒரு தொழில்நுட்ப வசதி மட்டுமல்ல. தமிழில் பிறந்த ஒரு செய்தி, ஒரு கருத்து, ஒரு கலைப் பதிவு, ஒரு சமூக அனுபவம் — மொழியின் எல்லையைத் தாண்டிச் செல்லும் தருணம்.
உலகளாவிய தமிழ்ச் சமூகத்தின் பல தலைமுறைகளும் பல மொழிகளும் ஒன்றோடொன்று வாழும் காலத்தில் இது முக்கியமான மாற்றம்.ஒரு வீட்டில் தமிழ் பேசப்படலாம். அதே வீட்டில் அடுத்த தலைமுறை வேறு ஒரு மொழியில் அதிகமாகப் படிக்கலாம்.
ஒரு புலம்பெயர் இளைஞன் தமிழைப் புரிந்துகொள்ளலாம்; ஆனால் நீண்ட தமிழ்க் கட்டுரையை வாசிப்பதில் சிரமப்படலாம்.அப்படிப்பட்ட இடைவெளிகளைக் கடக்க மொழிமாற்றம் உதவுகிறது. இதனால் 4தமிழ்மீடியாவின் மொழிப் பயணம், தமிழை விட்டு வெளியேறுவது அல்ல; தமிழை உலகுக்குக் கொண்டு செல்வது.
2026 — பதினெட்டு ஆண்டுகளின் வாசகர் நம்பிக்கை
எந்த ஊடகத்திற்கும் அதன் உண்மையான வரலாறு அதன் அலுவலகக் கட்டிடத்தில் எழுதப்படுவதில்லை. அதன் வாசகர் எண்ணிக்கையிலும் மட்டும் எழுதப்படுவதில்லை. அது வாசகரின் நினைவில் எழுதப்படுகிறது.
18 ஆண்டுகளின் தொடர்ச்சியில் 4தமிழ்மீடியாவை நாடிய வாசகர்கள் இன்று ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான அளவை எட்டியிருப்பது, எமக்கு வெறும் புள்ளிவிவரம் அல்ல. அது ஒரு பயணத்தின் பல படிகளைக் காட்டுகிறது.
முதல் வாசகர் - ஆர்வம்.
முதல் நூறு வாசகர்கள் — அறிமுகம்.
முதல் ஆயிரம் — நம்பிக்கை உருவாகும் தொடக்கம்.
பத்தாயிரங்கள் — சமூகப் பரவல்.
ஒரு இலட்சத்தைத் தாண்டிய வாசிப்பு — ஒரு ஊடக உறவு உருவானதற்கான அடையாளம். ஆனால் ஒன்றரை இலட்சம் என்பது இலக்கு அல்ல. அது ஒரு கேள்வி. இத்தனை வாசகர்களின் நம்பிக்கைக்கு நாம் இனி எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம்? அதுதான் 18ஆம் ஆண்டின் உண்மையான சவால்.
இந்த 18 ஆண்டுகள் சொல்லும் மூன்று பெரிய கதைகள்
முதல் கதை — ஒரு இனத்தின் நினைவு. 2009 எம்மை ஒரு அடிப்படை உண்மையுடன் நேருக்கு நேர் நிறுத்தியது.
வரலாற்றை யார் எழுதுகிறார்கள்? அதிகாரம் கொண்டவர்களா? வெற்றியாளர்களா? அல்லது உயிர் தப்பியவர்களின் சாட்சிகளும் அதில் இடம்பெற வேண்டுமா?
முள்ளிவாய்க்கால் பதிவுகள் எமக்கு ஊடகத்தின் நினைவகப் பொறுப்பை உணர்த்தின. சாட்சி இல்லாத வரலாறு முழுமையான வரலாறு அல்ல. அதனால் செய்தி என்பது அன்றைய வாசிப்புக்காக மட்டும் அல்ல. சில செய்திகள் நாளைய தலைமுறைகளுக்காகவும் எழுதப்படுகின்றன.
இரண்டாவது கதை — புலம்பெயர்ந்த மனிதனின் அன்றாட உலகம்
COVID காலம் இதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது. ஐரோப்பாவின் ஒரு நாட்டில் வெளியான அரசாங்க அறிவிப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களின் அடுத்த நாள் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடியதாக இருந்தது.
அந்த நேரத்தில் ஊடகம் வெறும் அரசியல் செய்தி வழங்குநராக இருக்க முடியாது. அது ஒரு தகவல் வழிகாட்டி ஆக வேண்டும். தெளிவாகச் சொல்ல வேண்டும்.உடனுக்குடன் சொல்ல வேண்டும். சரிபார்த்து சொல்ல வேண்டும்.
புரியக்கூடிய மொழியில் சொல்ல வேண்டும்.
அந்த அனுபவம் 4தமிழ்மீடியாவின் வாசகர் உறவை இன்னும் ஆழப்படுத்திய ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைந்தது.
மூன்றாவது கதை — ஒரு தமிழ் ஊடகம் உலகை நோக்கிச் செல்லுதல்
“உலா” தொடர்பாடலில் தொடங்கி, 12 மொழிகளில் வாசிக்கும் வசதி வரை வந்திருக்கும் பயணம், ஒரு அடிப்படை மாற்றத்தைச் சுட்டுகிறது. தமிழில் எழுதுவது ஒரு எல்லை அல்ல. அது ஒரு தொடக்கம்.
ஒரு தமிழ் ஊடகம் உலகளாவிய தகவல் வெளியில் தனது இடத்தை உருவாக்க முடியும். தமிழ் வாசகரைத் தாண்டி தமிழ் அனுபவத்தையும் உலக வாசகரிடம் கொண்டு செல்ல முடியும்.தொழில்நுட்பம் அதற்கான பாலமாக இருக்க முடியும்.
நம்பிக்கை: எமது மிகப்பெரிய எண்ணிக்கை
ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்கள். இந்த எண்ணிக்கையைப் பார்த்து பெருமைப்படலாம். ஆனால் ஒரு ஆசிரியர் குழுவாக நாம் வேறு ஒன்றைத்தான் பார்க்கிறோம். அது ஒன்றரை இலட்சம் பொறுப்புகள்.
ஒரு வாசகர் எமது செய்தியை நம்பி ஒரு முடிவெடுக்கலாம். ஒரு மாணவர் எமது கட்டுரையின் மூலம் ஒரு காலத்தை அறிந்துகொள்ளலாம். ஒரு புலம்பெயர் குடும்பம் ஒரு நாட்டின் புதிய விதிமுறையை எமது செய்தியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு இளம் எழுத்தாளர் தனது முதல் கட்டுரையை எமது தளத்தில் வெளியிடலாம். ஒருவர் முள்ளிவாய்க்கால் பற்றிய பழைய பதிவைத் தேடி வரலாம். மற்றொருவர் ஒரு கலைஞரைப் பற்றிய கட்டுரையைப் படித்து அவரது படைப்பைத் தேடிச் செல்லலாம். அதனால் வாசகர் எண்ணிக்கை என்பது எமக்கு வெறும் traffic அல்ல. அது மனிதர்களின் வாழ்க்கையுடன் எமக்குள்ள தொடர்பின் அளவு.
18 ஆண்டுகளுக்குப் பிறகு; மீண்டும் ஆரம்பத்திற்கே
பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் ஒரு கேள்வியிடம் வந்து நிற்கிறோம். ஏன் ஊடகம்? பதில் மாறவில்லை. ஏனெனில் உண்மையைத் தேட வேண்டியுள்ளது. ஏனெனில் கேள்வி கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில் நினைவுகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அதிகாரத்தைப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டியுள்ளது.
ஏனெனில் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் தகவல்களைத் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது.
ஏனெனில் பல குரல்கள் ஒன்றோடொன்று பேசுவதற்கான இடம் தேவைப்படுகிறது.

எதிர்காலத்தின் வாசலில்
அடுத்த பதினெட்டு ஆண்டுகள் எப்படி இருக்கும்? அதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. செயற்கை நுண்ணறிவு இன்னும் வளரலாம். மொழித் தடைகள் மேலும் குறையலாம். செய்தி உருவாக்கும் முறைகள் மாறலாம். வாசிப்பு பழக்கங்கள் முற்றிலும் மாறலாம். ஒரு நாள் இணையத்தளமே பழைய ஊடக வடிவமாகக் கருதப்படலாம்.
ஆனால் மனிதனின் கேள்விகள் மாறுமா? உண்மை என்ன? யாரை நம்புவது? என்ன நடந்தது? ஏன் நடந்தது?
யாருக்கு இதனால் பயன்? யார் பாதிக்கப்பட்டார்கள்? இந்தக் கேள்விகள் இருக்கும் வரை ஊடகத்திற்கான தேவை இருக்கும்.
நமது உறுதி
18 ஆண்டுகள் எமக்கு ஒரு உரிமையை வழங்கவில்லை.ஒரு பொறுப்பை வழங்கியுள்ளது. அந்தப் பொறுப்பின் பெயர்; நம்பிக்கை. எனவே இனியும்;
அதிகாரத்தின் நிறத்தைப் பார்த்து கேள்வியை மாற்றமாட்டோம். பிரபலத்தின் அளவைப் பார்த்து உண்மையின் மதிப்பை நிர்ணயிக்கமாட்டோம்.வைரலாகும் வேகத்தைப் பார்த்து செய்தியின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கமாட்டோம். தொழில்நுட்பம் வளரும்போது ஊடக அறத்தை மறக்கமாட்டோம். எமது தவறுகளைத் திருத்துவதிலிருந்து பின்வாங்கமாட்டோம். மொழிகள் பெருகும்போது தமிழை மறக்கமாட்டோம். தமிழில் இருந்து உலகை நோக்கிச் செல்லும்போது எமது வேர்களை இழக்கமாட்டோம்.
18 ஆண்டுகள் ஒரு முடிவல்ல
2008-ல் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய பாதை, 2009-ல் வரலாற்றின் சாட்சியங்களைச் சுமந்தது. பின்னர் அரசியல், பொருளாதாரம், கலை, ஆன்மீகம், சமூக வாழ்வு என பல திசைகளில் விரிந்தது.
2020-ல் உலகமே நின்றபோது, ஐரோப்பாவின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்த தகவல்களைத் தமிழில் உடனுக்குடன் எடுத்துச் சென்றது.
2023-ல் “உலா” வழியான தொடர்பாடலில் புதிய வாசகர் உறவைத் தேடியது.
2025-ல் 12 மொழிகளுக்குள் விரிந்து, தமிழில் உருவான உள்ளடக்கங்களை மொழியின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்லும் புதிய கதவைத் திறந்தது.
இன்று ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்களின் நம்பிக்கையைத் தாங்கிக்கொண்டு 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இவை வெறும் ஆண்டுகள் அல்ல. ஒரு காலத்தின் சுவடுகள். ஒரு சமூகத்தின் நினைவுகள்.ஒரு ஊடகத்தின் பரிணாமம்.ஒரு வாசகர் உறவின் வளர்ச்சி.
நேற்றின் சாட்சியங்களைப் பாதுகாத்து,இன்றின் உண்மைகளைத் தேடி,நாளைய கேள்விகளுக்குத் தயாராகி நமது பயணம் தொடர்கிறது.
4தமிழ்மீடியா 18 ஆண்டுகள்.
ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களின் நம்பிக்கை, பல தலைமுறைகளின் நினைவுகளோடு, பல மொழிகளின் வாசல்களைத் திறந்து, ஒரே அடிப்படை உறுதியுடன், சுதந்திரமாகப் பார்க்க, நடுநிலையாகக் கேட்க,
பொறுப்புடன் பதிவு செய்ய,உண்மையைத் தேட, இது ஒரு பயணம். உங்களோடு தொடரும் பயணம்.
என்றும் மாறா இனிய அன்புடன்
மலைநாடான் மற்றும் 4தமிழ்மீடியா குழும உறுப்பினர்கள்.
