திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கஜானாவை நிரப்புவதில் மும்முரம் காட்டுவதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி தாக்கிப் பேசியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.
பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றி பேசுகையில், “பழங்குடியினரின் வேலைகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமிக்கும் ஊடுருவல்காரர்களை திரிணமூல் காங்கிரஸ் அரசு பாதுகாத்து வருகிறது.
வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவோர் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரிசெய்வதிலேயே நேரம் போய்விடுகிறது; எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும்
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தங்கள் கஜானாவை மட்டுமே நிரப்பிக் கொள்ள மும்முரம் காட்டின. ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இந்தியாவைப் பின்னோக்கிப் பார்க்கவோ, அதனை தடுத்துநிறுத்தவோ தேவையில்லை. உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக முன்னேறி வருகிறது. இந்த நூற்றாண்டின் 2-வது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கல்களாக அமைந்துள்ளன.
வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் 2014 ஆம் ஆண்டில் 11 ஆம் இடத்தில் இருந்தோம்; இன்று 3-வது இடத்தில் இருக்கிறோம். நமது நாட்டில் குறைவான பணவீக்கத்தையும், அதிக வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது.
இது சிறந்த பொருளாதாரத்தை வலிமையைப் பார்க்க முடிகிறது. உலகின் வலுவான குரலாகவும் இந்தியா மாறியிருக்கிறது. கடந்த காலங்களில் இந்தியாவுடன் எந்த நாடும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வராததற்கு எதிர்க்கட்சியினர் (காங்கிரஸ்) பதில் கூற வேண்டும்.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பின்னர் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிலைத்தன்மையைப் பெற்றிருக்கிறது. பெரிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளன. இதுவே இந்தியா எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து தான் குஜராத் முதல்வராக இருந்த நாள்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, மாநிலத்தை மட்டுமே ஆட்சி செய்தபோது, அவர் ஜப்பானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பெரிய முதலீடுகளை ஈர்த்ததையும் குறிப்பிட்டார். தொலைநோக்குப் பார்வை, நம்பகத்தன்மை மற்றும் தலைமைப் பண்பு உள்ளிட்டவை இந்தியாவின் நிலையை மாற்றியிருப்பதாகவும் அவர் கூறினார்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கஜானாவை நிரப்புவதில் மும்முரம்: பிரதமர் மோடி தாக்கு!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode
