புதுடெல்லி: காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியில், இந்தியா 3ஆம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறையில் அதன் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைந்தல், சுற்றுச்சூழல் மாசு அடைந்தல், அதனால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தியை உலக நாடுகள் ஏற்று செயல்படுத்தி வருகின்றன. பரந்து விரிந்த பரப்பளவு உள்ள இந்தியாவில், நீர் மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
எனினும், சுற்றுச்சூழல் மாசு அடைவதில் இவை, கனிசமாக பங்கு வகிக்கின்றன.
இதற்கு தீர்வாக காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியை இந்திய அரசு ஊக்குவித்து, அதற்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் பயனாக, இந்தியா இத்துறையில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
இது தொடர்பாக, பிரிட்டனை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான எம்பர், ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. எம்பர் அமைப்பின் அண்மை ஆய்வறிக்கை கூறியிருப்பதாவது:
உலகளவில், 215 நாடுகளின் மின் உற்பத்தி குறித்து ஆய்வு செய்தோம். கடந்த ஆண்டு, சர்வதேச அளவிலான மின் உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் அணு சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதில், சர்வதேச அளவில் நீர்மின் நிலையங்கள் மூலம் 14%, அணு சக்தி மூலம் 9%, காற்றாலைகள் மூலம் 8%, சூரிய மின் கட்டமைப்புகள் மூலம் 7%, இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 3% மின் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சர்வதேச அளவிலான காற்று, சூரிய மின் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவின் மொத்த உற்பத்தியில் 82 சதவீத மின்சாரம், காற்றாலை, சூரிய மின் கட்டமைப்புகள், நீர் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவிலான காற்று, சூரிய சக்தி மின் உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 78% நிலக்கரி உள்ளிட்ட புதைபடிமங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.