சாத்தான்குளம் தந்தை,மகன் காவல் நிலைய கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாகக் குற்றச்சாட்டின் கீழ், காவல் துறையினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
காவல்நிலையத்தில் நடந்த இந்த இரட்டைக் கொலை தொடரபாக, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார் சம்பந்தப்பட்ட 9 காவல்துறையினரும் குற்றவாளிகள் எனும் தீர்ப்பினை வாசித்தார். அவரது தீர்ப்பில், உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது உண்மைதான். ஆனாலும், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் பலமுறை தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர்.ஆதலால் சாத்தான்குளத்தில் போலீசார் கம்பு, கம்பியால் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளனர்.
ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையே தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது. தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ தரப்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது. ஆகவே குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. ஆதலால் குற்றவாளிகள் 9 பேரின் ஊதிய விவரம், சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வரும் 30ம் திகதி இவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்.
