பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
இருந்த போதிலும் கோடை வந்துவிட்டால், சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதனை தடுக்கும் முறைகளை கடைபிடித்தால், கோடை கால நோய்களை விரட்டி அடிக்கலாம்.
ஏப்ரல் மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் கண் சோர்வு, கண் எரிச்சல், ஸ்கின் ப்ர்ன், ஹீட் ஸ்ட்ரோக், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உடல் சூடு அதிகரிக்கும் போது, மலச்சிக்கல், மூலநோய், அஜீரண தொந்தரவுகள் அதிகரிக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கோடையில் சந்திக்கும் மற்றொரு பிரச்னை என்றால், நீர்ச்சத்து குறைபாடு. உடலில் நீர்ச்சத்து குறையும்போதும், அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றோடு சேர்த்து ரத்தகொதிப்பும் அதிகரிக்கும். இதனால், நீர்சுருக்கு ஏற்படவும், மூச்சுத்திணறல் போன்றவையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடையில் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னை சமைத்து வைக்கும் உணவுகள் விரைவில் கெட்டுப் போய்விடும். அது
தெரியாமல் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.
கோடையில் பலரும் அதிகமாக தண்ணீர் குடிப்பதில்லை என்பதால், சரும பிரச்னைகள், முகப்பரு தொந்தரவு, அம்மை நோய்கள் போன்றவை வெயில் காலங்களில் அதிகளவு காணப்படும் என்றும் சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் பிரச்னையும் கோடை காலத்தில் அதிகமாக காணப்படும் எனவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலத்தில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் நாம் வீட்டில் இருந்தபடி சில எளிய வழிகளை கடைபிடித்தாலே அவற்றை தவிர்த்துக் கொள்ளலாம். தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீரை குடித்தால் மேற்சொன்ன எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு
கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தண்ணீர் குடிக்க முடியாதவர்கள், பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். தினசரி ஒரு இளநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அல்லது நீர் மோர் குடிப்பதையும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர் பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம், நுங்கு போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால், நீர்சுருக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம்.
சருமப் பிரச்னைகளை தவிர்க்க அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு போகும்போது முடிந்தளவு குடையை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதுபோன்று கருப்பு நிற உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். கோடையில் விடுமுறை காலம் என்பதால், குழந்தைகள் பலரும் வெயிலில் அதிக நேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதை தவிர்க்க வேண்டும். மாலை 4 மணிக்கு மேல் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்கலாம். கோடைகாலங்களில் அதிகளவு உடலை
வறுத்திக்கொள்ளும் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்த்து மெல்லிய பயிற்சிகளை செய்வது நல்லது.
மோர் கலந்து கற்றாழைச்சாறு குடிப்பது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக, காலையில் ஒரு டம்ளர் மோரில் ஒரு சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனுடன் நன்கு அலசி சுத்தம் செய்த கற்றாழையை சேர்த்து மிக்சியில் அடித்து குடிக்கலாம். அல்லது தேங்காய்ப்பாலில் சுத்தம் செய்த கற்றாழை துண்டுகளைப் போட்டு
பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அடித்துக் குடிக்கலாம். இதைத் தொடர்ந்து குடித்து வரும்போது, உடல் சூட்டை குறைத்து சரும பிரச்னைகள் அனைத்தையும் சரி செய்துவிடும்.
வீட்டில் தயாரித்த மோரில், கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது பெருங்காய தூள் சேர்த்து குடித்தால் உடல் சூட்டால் ஏற்படும் அதனை பிரச்சினைகளும் காணாமல் போகும். அதேபோல் எலுமிச்சை பழ சாற்றில் வெட்டிவேர் அல்லது நன்னாரி சர்பத் சேர்த்து அருந்தினால் கோடை பாதிப்புகள் விலகி ஓடும்.
விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இரண்டும் சேர்த்து ஒரு பத்து மில்லிகிராம் எடுத்து கலந்து தொப்புளைச் சுற்றி தடவிவிட்டு, அதன் மீது ஒரு காட்டன் டவல் எடுத்து நனைத்து பிழிந்துவிட்டு இருபது நிமிடம் போட்டு வைத்தால் உடல் சூட்டை உடனடியாக குறைத்துவிடும். அஜீரண தொந்தரவு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை அதிகம் ஆகாமல்,
பார்த்துக் கொள்ளும். உணவு செறியாமை தொந்தரவை சரி செய்யும். மேலும், மாதவிடாய் சுழற்சியை சரி செய்யவும் இது உதவும்.
சிலருக்கு சருமம் வறண்டு போதல், சருமஎரிச்சல், கறுத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு அதிக வியர்வை சுரப்பினால், உடலில் உப்பு பூத்து, மணல் போன்று நர நரவென்று இருக்கும். அவர்கள் ஒருநாளில் 2 – 3 வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. பெரும்பாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காட்டன் உடைகளாக அணிந்துகொள்வது நல்லது. அதிலும் குறிப்பாக, வெயிலில் வெளியே செல்ல நேரும்போது
காட்டன் உடைகள் சிறந்தது.
நீர் வகைகளில், பதநீர், நன்னாரி சர்பத், பழச்சாறுகள், பழங்களை மசித்து வீட்டிலேயே தயாரித்த ஐஸ்க்ரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு வாழைப்பழத்தை எடுத்து துண்டுகளாக்கி இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்துவிட்டு, காலை எழுந்து அதை எடுத்து அதனுடன் காய்ந்த திராட்சை, முந்திரி, பேரீச்சம் பழம், நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்து, சிறிது நேரம் ஃப்ரீசரில்
வைத்து எடுத்தால் ஐஸ்க்ரீம் ஆகிவிடும்.
இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடும் போது கோடையின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். குளம், ஆறு மற்றும் ஓடைகளில் குளிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் கூடும். நகரங்களில் வசிப்போர் கிராமங்களுக்கு சென்று இயற்கையான சூழலில் விடுமுறையை கழித்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றால் அது மிகையல்ல