திபெத்தில் நீர்த்தேக்க அணை உடைப்பு ஏற்படலாம் எனும் அச்சம் நிலவி வந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு உருவாகும் அபாயம் இருப்பதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியது. திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து வீழ்ந்ததின் காரணமாக, ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவில் இதுவரை 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந் நிலையில் திபெத்தில் ஏரி உடையும் அபாயம் உள்ளதெனவும், மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது திபெத்தில் உள்ள நீர்த்தேக்க அணை உடைந்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதே கோஷி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
