பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைக்குள் கப்பல்கள் நுழைவதையோ அல்லது வெளியேறுவதையோ தடுப்பதற்காக, அமெரிக்கக் கடற்படை "உடனடியாக" முற்றுகையைத் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக செய்திதகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதப் போக்குவரத்திற்குப் பொறுப்பான இந்த நீர்வழிப்பாதையின் மீது மூலோபாயக் கட்டுப்பாட்டைச் செலுத்த டிரம்ப் முயன்றார். இதன் மூலம், போரில் ஈரானின் முக்கியப் பொருளாதார பலத்தைப் பறிக்கலாம் என அவர் நம்பினார். அதுசாத்தியமற்றுப் போன நிலையில், அவர் சர்வதேச எல்லைகளின் வழியில், குறித்த நீரிணையை முற்றுகையிடவும், ஈரானுக்கு சுங்கவரி செலுத்திப் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
"சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்குச் சுங்கம் செலுத்திய ஒவ்வொரு கப்பலையும் தேடிப்பிடித்து இடைமறிக்குமாறு நமது கடற்படைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். சட்டவிரோதமாகச் சுங்கம் செலுத்தும் எவருக்கும் ஆழ்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது," என்றும் "சரியான தருணத்தில் ஈரானை முடித்துவிட" அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், " போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியதற்கு தெஹ்ரானின் அணுசக்தி லட்சியங்களே முக்கியக் காரணம் " என்றும் அமெரிக்கஅமெரிக அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் முன்னனி வகிக்க, சனிக்கிழமை காலை முதல் நடத்திய 21 மணிநேர நேரடிப் பேச்சுவார்த்தைகள், உடன்பாடுகள் எட்டப்படாமல் முடிந்திருக்கும் நிலையில், அணு ஆயுதப் பாதையைக் கைவிடுவதற்கு ஈரான் உறுதியளிக்க மறுத்ததே பேச்சுவார்த்தைகள் முறிந்ததற்குக் காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், பேச்சுவார்த்தை முறிவுக்கு அமெரிக்காவையே ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர், ஆனால் அதற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை.
இவ்வாறான நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புக்கள் இன்னமும் முற்றாக மறைந்துவிடவில்லை. வரும் நாட்களில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு புதிய பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்க தனது நாடு முயற்சிக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் கூறினார். அவர் மேலும் கூறுகையில், " அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாகுவதற்கு, இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது கட்டாயமாகும்," என்றும் கூறினார் எனத் தெரிய வருகிறது.
