இன்று 17.03.2026 ம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நாட்டின் தற்போதை நிலைகுறித்து நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளக்க உரையொன்றினை ஆற்றியிருந்தார். அந்த உரை யில்;
"அண்மைக்கால நிலைமைகள் குறித்து எமது நாட்டு மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் தெளிவின்மையும் காணப்படுகிறது. பொருளாதாரத் தேவைகள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, அன்றாடம் தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுகிறது.
இவ்வாறான பிரச்சினைகளின் போது எதிர் கொண்ட மோசமான அண்மைக்கால அனுபவங்கள் காரணமாக இவ்வாறான நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த யுத்தத்தில் அரசாங்கம் என்ற வகையில் எமது நிலைப்பாடு நடுநிலை வகிப்பதாகும். எமது செயற்பாடுகள், உடன்பாடுகள் அனைத்தும் இந்த நடுநிலைப் போக்கிலே தங்கியுள்ளது. இந்த நடுநிலையை பேண வேண்டியுள்ளது. இந்த நடுநிலைப் போக்கு சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எம்மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் எந்த திசைக்குத் தள்ளப்பட்டாலும் எமது நடுநிலைப் போக்கை மாற்ற மாட்டோம்.
எந்த அதிர்வுக்கும் முகங்கொடுக்கும் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
உள்ளக அதிர்வு மற்றும் வெளி அதிர்வு என இரு வகை அதிர்வுகளை நாடு எதிர்கொள்கிறது. வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அதிர்வுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க எம்மால் முடிந்தது. கடந்த இரண்டு மாத கால பொருளாதார தரவுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் வெளி அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வுக்கு ஏற்றவாறு எமது பொருளாதாத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த மோதலில் ஒவ்வொரு தரப்பும் யுத்தத்தின் தமது இலக்குகளை தெரிவு செய்துள்ளன. ஆட்சியை மாற்றுவதை சில தரப்புகள் இலக்காகக் கொண்டுள்ளன. சில தரப்புகள் விநியோகக் கட்டமைப்பை முடக்குவதை தமது இலக்காகக் கொண்டுள்ளன. இது தான் யுத்தத்தின் போக்கு. ஹோமூஸ் சமுத்திர சந்தியை மூடல், எரிபொருள் களஞ்சியங்களுக்கு தாக்குதல், எரிபொருள் கப்பல்களை தாக்குதல்,துறைமுகங்களை தாக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகிறது. வலு சக்தி சந்தையில் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இது சரியா தவறா, நியாயமானதா என்பது வேறு பிரச்சினை.
வலு சக்தி சந்தையில் உற்பத்தி, சேமித்து வைத்தல் மற்றும் விநியோக பொறிமுறை முடங்கியுள்ளது. இன்று உற்பத்தி,களஞ்சியம் மற்றும் விநியோக சங்கிலி முடங்கியுள்ளது. இதனால் எரிசக்தி துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது யுத்தத்தின் ஒரு மூலோபாயமாக உள்ளது. இந்த யுத்தத்தின் முக்கிய நோக்கம் இதனுடன் தொடர்புபட்டதாகவே உள்ளது.
விசேடமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி எமது இறக்குமதிகள் ஆகும். எரிபொருள் பெற நீண்ட கால விலை மனுக்களை வழங்கியிருந்தோம். ஆனால் இரு டெண்டர்களை உரிய காலத்தில் பெற முடியாதுள்ளது. அவை தாமதித்தே எரிபொருள் விநியோகிப்பதாக அறிவித்துள்ளன. அடுத்து தனியார் விநியோகஸ்தர்களின் ஒரு கப்பல் உரிய காலத்தில் விநியோகம் மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு உள்ளது.
இதில் முகாமைத்துவ செயல்முறையொன்று உள்ளதோடு ஒரு கப்பல் தாமதமாக வந்தால் கூட முழுக் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்படும். வரையறுக்கப்பட்ட வளங்களின் ஊடாகவே நாம் வலுசக்தி துறையை நிர்வகிக்கிறோம். எரிபொருள் விநியோகம் உரிய காலத்தில் கிடைக்காத நிலையில் நாம் எமது முன்னெடுப்பு எவ்வாறு இருக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டு எமது பொருளாதாரத் துறை குறிப்பிடத்தக்க இலக்குகளை எட்டிய வருடமாகும். இந்த பொருளாதார வெற்றிகளை தொடர்ச்சியாக பேணி இந்த நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதே எம்முன் உள்ள சவாலாகும்.
பொது மக்களும் தமது வாழ்க்கைப் போக்கில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
மக்களின் வாழ்வையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது என கவனிக்க வேண்டும். இந்த வலு சக்தி நெருக்கடியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து வருகிறோம். அதற்காக பொருளாதார கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு குறுகிய காலத்தில் கூடி நிலைமைகளை மீளாய்வு செய்கிறது. மத்திய வங்கி இரண்டு நாளைக்கு ஒரு தடவை எமக்கு புதிய நிலைமைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளை முன்வைக்கிறது. அது குறித்து பொருளாதார கண்காணிப்புக் குழுவில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது. தரவு மற்றும் தகவல்களின் பிரகாரம் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
வலுசக்தி விநியோகத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான தலையீடு மேற்கொள்ளப்படுகிறது. நெருக்கமான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அவற்றில் சிறந்த முன்னேற்றம் உள்ளது. துரித கொள்முதல் தொடர்பான டெண்டர்கள் கோரப்பட்டன. டீசல், மசகு எண்ணெய், பெற்றோலுக்கு நம்பகரமான விநியோகஸ்தர்கள் விண்ணப்பித்துள்ளனர். எந்த நிமிடமும் எரிபொருள் கப்பல் இடைநடுவில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்காகவும் டெண்டர்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாளை டீசல் டெண்டர் ஒன்றை வழங்க இருக்கிறோம். அந்த டெண்டர்களில் ஓரளவு விலை அதிகரிப்பு உள்ளது. வலு சக்தி விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க இந்த டெண்டர்களை வழங்க இருக்கிறோம். இந்தப் பிரச்சினையுடன் கருப்புச் சந்தைகள் உருவாக வாய்ப்புள்ளது. அரச துறையில் துரித கொள்முதலுக்கு வாய்ப்பு குறைவு. துரித முடிவுகளை எடுத்து செயற்பட சிறந்த அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சுற்றுலாத் துறை போன்ற டொலர்களில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோர் டொலரில் எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்குமாறு கோரினர். அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் ஏற்றுமதிக் கைத்தொழில் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தொடர்பாக எடுத்தால் மார்ச் மாதத்தில் சமையல் எரிவாயு தேவை 33 000 மெற்றிக் தொன்களாக இருந்தது. ஆனால் 38 000 மெற்றிக் தொன் கொள்வனவு செய்யப்பட்டது. ஓரளவு விநியோகிக்கப்பட்டுள்ளன. ஓரளவு எரிவாயு எமது களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ளதோடு மற்றொரு பகுதி மாலை தீவில் மிதக்கும் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை அல்லது நாளை மறுதினம் 33 000 மெற்றிக் தொன் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது. எரிவாயு தொடர்பில் நெருக்கடி ஏற்படாது. அடுத்த கப்பல் ஏப்ரல் 21-23 ஆம் திகதியளவில் வந்தடைய உள்ளது.
அடுத்து நிலக்கரி, 23 நிலக்கரி கப்பல்களுக்காக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அதில் 13 கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. அடுத்த கப்பல்கள் வந்தடைவதில் தாமதம் உள்ளது. அதனால் துரித கொள்முதல் செய்வதற்கு விலைமனு கோரியிருந்தோம். அது தொடர்பான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. விநியோகஸ்தருக்கு நிலக்கரி கொள்முதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. 5 கப்பல்களில் நிலக்கரி எடுத்து வரப்பட உள்ளது. நம்பகரமான நிலக்கரி விநியோகஸ்தர்களுக்கே இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
எமது இராஜதந்திர தொடர்புகளின் ஊடாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான கடிதங்கள் பரிமாறப்பட்டு வருவதோடு ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். வலுசக்தி துறையில் நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கைவசமுள்ள எரிபொருளை பாதுகாப்பதற்காகவே QR முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சில சிக்கல்கள் உள்ளன.
முன்னர் நாடு முடக்கப்பட்டிருந்ததால் அந்த முறையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் எம்மால் அவ்வாறு முடியாது. பொருளாதாரத்தை இதே போன்று பேண வேண்டியுள்ளது. நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டிய தெளிவுடனே நாம் இந்த முறையை அறிமுகம் செய்தோம். 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் QR முறையை பதிவு செய்துள்ளனர். எரிபொருள் நிலையங்களை மூடி ,நாட்டை மூடி இதனை செயற்படுத்த முடியாது.
இதனை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்க்கவில்லை. இந்த விநியோகங்கள் வெற்றியளித்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். சில துறைகளுக்கு இந்த முறையினால் நெருக்கடி ஏற்படலாம். சுகாதாரத் துறை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார். பாதுகாப்பு எரிபொருள் கையிருப்பொன்றை பேண முடிவு செய்துள்ளோம்.
விவசாயத்துறை,மீன்பிடித்துறை,கைத்தொழிற்துறை , சிறு கைத்தொழில்களுடன் தொடர்புள்ளோர் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அமைச்சர்களை அழைத்து பேசினோம். கைத்தொழிற்துறையினருக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்க கைத்தொழில் அமைச்சு திட்டமொன்றை தயாரித்துள்ளது. சிறுபோகத்திற்கு எரிபொருள் அவசியம். அவர்களுக்கு கூடுதல் எரிபொருள் வழங்கப்படும். மீனவர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப எரிபொருள் வழங்கப்படும். 30 000 சிறு படகுகள் உள்ளன. அவற்றுக்கும் எரிபொருள் வழங்க இருக்கிறோம். QR முறையினால் போதுமான அளவு எரிபொருள் கிடைக்காத அத்தியாவசிய துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூடுதல் எரிபொருள் வழங்க பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது.
உணவு விநியோகக் கட்டமைப்பு தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். உற்சவ காலம் நெருங்குவதால் சில பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படும். 3 மாத காலத்திற்கு களஞ்சியப்படுத்தும் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். 2 வாரங்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய பொருள்களை இறக்குமதி செய்யும் தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடி தேவையான எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரக்கறிகளை விநியோகிக்க தேவையான எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து அரச துறையில் ஒவ்வொரு அமைச்சிற்கும் இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவை தமது எரிபொருள் தேவையை 25 சத விகிதத்தினால் குறைக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு அமைய ஒரு நாள் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச துறையில் குறைவாகவே ஒன்லைன் முறை செயற்படுத்தப்படுகிறது. புதன் கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச துறை செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை நீண்டகாலம் நீடித்தால் முகங்கொடுப்பதற்கு தேவையான பொறிமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் துறைகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமா அல்லது வட்டியில்லா கடன் வழங்க வேண்டுமா என ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எமது வேலைத்திட்டத்துடன் சகல தரப்பினரும் இணைந்து செல்ல வேண்டும். அரச துறையினால் மாத்திரம் இதனை செய்ய முடியாது. எவரும் அஞ்சவோ குழப்பமடையவோ தேவையில்லை. இந்த சவாலை வெற்றி கொள்ளலாம். அதற்காக பலமான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையான மாற்றங்களை அன்றாடம் மாற்றி வருகிறோம். நானும் எனது அரசாங்கமும் தலையிட்டு பணியாற்றி வருகிறது. இதற்கான ஒத்துழைப்பை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறோம்."
என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
