உருளைக்கிழங்கின் மருத்துவ நன்மைகளை இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
முற்காலத்தில் உருளைக்கிழங்கைப்பற்றி மிகவும் சிரேஷ்டமாக கூறியிருக்கின்றார்கள். கீர்வாண வாகட சாஸ்திரத்தில் பஞ்சமாத்தியாயத்தில், முற்கூறிய உருளைக்கிழங்கை தேவர்களெல்லாரும் புசித்துத் தேக உறுதிபெற்று,மாமிசபட்சிணிகளான அரக்கர்களை எதிர்க்கத்தக்க வல்லமையைப் பெற்று வாழ்ந்திருந்தனர் என்று கூறப்பட்டிருக்கின்றது. உருளைக்கிழங்கானது மாமிசமல்லாததாயிருந்தபோதிலும் மாமிசத்துக்குள்ள பலம் பெற்றிருக்கின்றது. ஆகையால்தான் இது "அபிசிதமூலம்” என்று முன்னோர்களால் கூறப்பட்டிருக்கின்றது.
அவ்வாறான உருளைக்கிழங்கின் மருத்துவ நன்மைகளை இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
தாவரவியல் பெயர்- Solanum tuberosum
குடும்ப பெயர்- Solanaceae
ஆங்கிலப் பெயர்-Potato
சிங்கள பெயர்- Ala
சமஸ்கிருத பெயர்- Aalukam
வேறு பெயர்கள்- அபிசித மூலம்
பயன்படும் பகுதி-
இலை, கிழங்கு
சுவை- இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு
வேதியியல் சத்துக்கள்-
Starch
Atropine alkaloids
மருத்துவ செய்கைகள்-
இலை
Antispasmodic - இசிவகற்றி
கிழங்கு
Aperient- மலமிளக்கி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Galactagogue- பாற் பெருக்கி
Nervous sedative - நரம்பு வெப்பகற்றி
தீரும் நோய்கள்-
மலக்கட்டு, உடல் மெலிவு, தூக்கமின்மை, தீக்காயம், இருமல்
பயன்படுத்தும் முறைகள்-
இதனை உணவுடன் சேர்த்து உண்ண மலக்கட்டை நீக்கும். சிறுநீரை அதிகரிக்கும்.
அதிகமாக பாலைச் சுரப்பிக்கும், நரம்புகளுக்கு சிற்றயர்வை உண்டாக்கி, மேக வியாதியாளருக்கு உற்சாகத்தை உண்டு பண்ணும்.
ஆகாரத்துக்கு மிகவும் ஏற்றது. இதை வேகவைத்துத் தோல் நீக்கி நெய்யில் வறுத்து சாப்பிட்டால், உடலுக்கு உறுதியை கொடுக்கும்.
நாட்பட்ட இருமல் நோயால் வருந்தி, தூக்கமில்லாதிருப்பவர்கள் இதன் இலைச்சாற்றையுண்டுவர சுக நித்திரை கொள்வார்கள்.
கிழங்கைப் பசையாகச் செய்து தீயினாற் சுட்ட புண்ணுக்கு வைத்துக்கட்ட அவை குணமாகும்.
சிறு குழந்தைகளுக்கு, அவித்த உருளைக்கிழங்குடன் பாலாடை சேர்த்து ஆகாரமாக ஊட்டலாம்.
குறிப்பு- உருளைக்கிழங்கில் பச்சை நிறத்தோற்றம் காணப்படின் அதனை உள்ளெடுக்கக் கூடாது; நச்சு விளைவைத் தோற்றுவிக்கும்.