ஓடிடி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில், ‘ஷியாம் சிங்க ராய்’
படத்தைப் பற்றிய சிலாகிப்புகளே அதிகமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகன் நானிக்கு, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி என இரண்டு கதாநாயகிகள். தன்னுடைய அதிரடியான நடனத்தால் சாய் பல்லவி பெயரைத் தட்டிக்கொண்டுபோனாலும் கீர்த்தி ஷெட்டியின் இளமை துள்ளும் நடிப்பு ரசிகர்களை பாடாய் படுத்தி வருவதாக ரசிகர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 2019-ல் ஹ்ருத்திக் ரோசன் நடித்த ‘சூப்பர் 30’ இந்திப் படத்தில் அறிமுகமான கீர்த்தி, அதன்பின்னர், இரண்டே ஆண்டுகளில் 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் புகழின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து சங்காரந்திக்கு வெளியான ‘பங்கார்ராஜு’ படமும் வெற்றியை அள்ளியிருப்பதால், கீர்த்தியை தமிழுக்கு யார் முதலில் அழைத்து வருவது என்பதில் கோலிவுட்டில் கடும் போட்டி நடந்து வருகிறதாம். ஏற்கெனவே இயக்குநர் லிங்குசாமி முந்திக்கொண்டிருக்கிறார். அவர், தெலுங்கு மற்றும் தமிழில் இயக்கி முடித்திருக்கும் 'தி வாரியர்' படத்தில் கீர்த்தி ஷெட்டிதான் நாயகி. ‘எங்களுக்குப் பொறுமையில்லை; உங்களைத் தமிழ்ப் படத்தில் எப்போது காண்பது’ எனத் தனது எதிர்பார்ப்பை பதிவிட்டிருக்கிறார் ஒரு இணையவாசி!