முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 110 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 84 மில்லியன் ரூபாவை விட அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு தகுதியான முன்னாள் ஜனாதிபதிகளில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்ததை அடுத்து நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை கருத்திற் கொண்டு அவர்களுக்காக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படக்கூடாது என்பதே தமது நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்தார்.