ஐரோப்பிய அணிகளுக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி, வடக்கு மாசிடோனியா அணியுடன் மோதியது.
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற நவம்பர், டிசம்பரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இத்தாலியில் உள்ள பாலேர்மோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐரோப்பிய மண்டல அணிகளுக்கான பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு ஐரோப்பிய சாம்பியனும், 4 முறை உலக கோப்பையை வென்ற அணியுயான இத்தாலி, வடக்கு மாசிடோனியாவை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த போட்டியில் இத்தாலி ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி வரை அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் மாசிடோனியா அணி வீரர் அலெக்சாண்டர் தாஸ்கோவ்ஸ்கி கோல் அடித்தார்.
முடிவில் இத்தாலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த தோல்வியின் மூலம் இத்தாலி அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தொடர்ந்து 2-வது முறையாக இழந்தது.