உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாவுள்ள இந்தியா, உலகளாவிய பல முக்கியமான விநியோகச் சங்கிலிகளுக்கு மையமாக உள்ளது.
ஆதலால் வரவிருக்கும் G7 உச்சிமாநாட்டில் நாட்டின் தலைமை விவாதங்களில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் காலிஸ்தானி பிரிவினைவாதி கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியை G7 உச்சிமாநாட்டிற்கு அழைத்ததற்காக கனடாவில் உள்ள அவரது அரசியல் எதிரிகள் சிலர் அவரை விமர்சித்ததைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் மார்க் கார்னி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 15 முதல் 17 வரை கனடா ஆல்பர்ட்டா மாகாணத்தில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள கனேடியப் பிரதமர் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுள்ளார். எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் எதிர்காலம், முக்கியமான கனிமங்கள் மற்றும் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கூட்டாண்மை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி7 உச்சிமாநாடு விவாதிக்கும் என்று கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இம் முறை கனடாவில் நடக்கும் G7 மாநாட்டிற்கு, பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா அழைக்கபபடவில்லை. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு G7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.