சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜாமின் மனுவை அவசர மனுவாக விசாரிக்கக்கோரி, நீதிபதி அல்லியிடம், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ முறையீடு செய்துள்ளார்.