விண்ணப்ப நிலையை தெரிந்து கொண்டு மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த உ 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தகுதியுடைய பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. விண்ணப்பித்த பலருக்கு பணம் வரவு வைக்கப்படவில்லை. எனவே தகுதியுடையவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை தெரிந்து கொண்டு மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக சந்தேகங்கள் மற்றும் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள் தங்களது விண்ணப்ப நிலையை தெரிந்து கொண்டனர். அதில் சிலருக்கு தவறான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே அவர்கள் இ-சேவை மையம் மூலமாக மேல்முறையீடு செய்யும் பொருட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலமாக 15 ஆயிரத்து 761 பேர் உரிமைத்தொகை பெற மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களின் விண்ணப்ப நிலை சரிபார்க்கப்பட உள்ளது. இதற்காக சில ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.