ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடு முகமாக, பெங்களூரில் நடைபெற்ற வெற்றி விழாவில் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, 11 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிய வருகிறது.
ஒரு வெற்றிக் கொண்டாட்டம் துயரமாக முடிந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றதாகவும் அறிய வருகிறது. இந்தத் துயர சம்பவம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார்.
ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் 17 ஆண்டுக் கனவாக இருந்த இந்த வெற்றியை, ஆர்சிபி ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். போட்டி அகமதாபாத்தில் நடந்ததால், பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி விழா கொண்டாடட்டத்தை, கர்நாடக அரசும் கர்நாடக கிரிக்கெட் சங்கமும் ஏற்பாடு செய்தது. இந்த வெற்றி விழாவில் மிக அதிக அளவு ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் இடம்பெற முறையான ஏற்பாடுகள் இன்மையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் மிகவும் துயர் தரும் இந்தச் சம்பவத்துக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்த போதும், ஆர்வ மிகுதியில் வரும் ரசிகர்களை காவல்துறையாலும் தடுக்க முடியாத நிலை. ஆதலால் காவல்துறை மீதும் குறை சொல்வதும் முறையாகாது என மேலும் தெரிவித்தார்.