ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22 இலட்சம் விண்ணப்பங்களில் பெரும்பாலானவர்களின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்புகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தத் தகவல் கணக்கெடுப்புப் பணி, மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதால், உரிய தகவல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு விரைவில் துல்லியமான தரவுகளை வழங்குமாறு விண்ணப்பதாரர்களை அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரர்கள் நலன்புரி உதவிகளை இழக்க நேரிடும் என்றும் அரசாங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.