அறம் தவறிடும் அகிலத்தில் சமரசங்கள் சரிந்து போகும். அது அரசியலாயினும் சரி ஆன்மீகமாயினும் சரி. நீதி கோரிடும் நெடும் பயணங்களும், போராட்டங்களும் நிகழ்ந்திடும் ஐ.நா முன்றலாயினும், ஆன்மீக வழித் தேடலான ஆலயங்களாயினும் சரி, அறம் தவறி நிற்கையில், அவை ஒரு போதும் அமைதியைப் பிறப்பிப்பதில்லை.
அறம் பிழைத்து, தார்மீகம் அற்றுப் போனவை யாவும் வெறும் கட்டிடக் குவியல்களே. அறம் பிழைத்த கட்டிடங்களுக்குள் சத்யமான தீர்வுகளோ தெய்வநிலையோ சாத்தியமாகாது.
அதிகாரமும், ஆணவமும், தன்னையும் அழித்துத் தான் சார்ந்தோரையும் அழிந்துவிடும் என்பதே எக்காலத்துக்குமான சத்யம். இராச்சியங்களின் அழிவிலிருந்து நாடுகளோ, நாடுகளின் சிதைவுகளிலிருந்து சமூகங்கங்களோ, சமூகங்களின் பிறழ்வுகளிலிருந்தோ மக்களோ இதனை புரிந்து கொள்ளாதவரை, அழிவு என்பதனை யாராலும் தடுக்க முடியாது. அது இஸ்ரேலோ, ஈரானோ, ஈழமோ, எல்லைகள் வெய்யவேறாயினும், எல்லாவிடத்திற்குமான சத்யம் ஒன்றே.
போர் ஒன்றும் பூ மணக்கும் நந்தவனம் அல்ல. ஈரானின் நேற்றைய தாக்குதல்களில் சிக்கிய இஸ்ரேலியர் ஒருவர் டெல் அவிவ் நரகமாகிவிட்டது எனக் கதறுகின்றார். இதே நரக வேதனையைத் தானே காசா மக்கள் அனுபவித்தார்கள். எறிகணைத் தாக்குதலுக்குப் பயந்து, மோட்டார் காரின் அருகில் காதுகளைப் பொத்தியவாறே பயந்தில் நடுங்கி ஒடுக்கும் இஸ்ரேலியக் குழந்தையின் அதே துயரினையும், வேதனையையும், அச்சத்தையும் காசாவின் குழந்தையும் பெற்றிருக்கும் என்பதுதானே உண்மை.
நட்சந்திரங்கள் மின்னுகின்ற வானம் என்பது எத்துனை வரம். அதன் அழகினை அனுபவித்து மகிழ வேண்டிய குழந்தைகளை கூக்குரலிட்டு அழவைக்கின்றார்கள். நட்சத்திரங்களை மறைத்து, வெடித்துச் சிதறும் எறிகணைகளால் இயற்கையை மறுக்கின்றார்கள். கந்தகத்தின் புகையினால் காற்றினை மாசடையச் செய்கின்றார்கள். இவர்கள் மான்புறு மனிதர்களா ?
பாதுகாப்பான சூழலிலும், பதவிகளிலும், மறந்து போகும் இயற்கையையும், மனிதநேயத்தையும், மானுட தர்மத்தையும், நினைவு கொள்ள வேண்டிய நிலையை, இயற்கையோ, இறையோ, என்றோ ஒருநாள் நிச்சயம் வழங்கும். எல்லா அதிகாரங்களையும் பிடுங்கியெறிந்து, வீழ்த்திவிடும் இயற்கை எனும் பெருஞ்சக்தி என்பதை நினைவிற் கொள்ள வேண்டும் என்பதையே கலிபோர்ணியாவின் காட்டுத் தீயும், கோவிட் பெருந்தொற்றும், ஆழிப்பேரலையும், மனித குலத்தின் முகத்தில் அறைந்து சொல்கின்றன. கீதையின் வரிகளில், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்" என்பதும் அதவே. இந்த வரிகளின் நியாயத்தை, சத்தியத்தின் வழி நின்று நடந்தால் மட்டுமே உணர முடியும்.